Breaking News

ஊக்கமது கைவிடேல்

நிர்வாகி
0
(ஏ.பீ. முகம்மது அலி)


நான் 2010 ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை மண்ணடியிலுள்ள முன்னாள் புதுக்கல்லூரி செயலாளர் ஒருவருடைய அலுவலகத்தில் இரண்டு முன்னாள் செயலாளர்கள் மற்றும் மியாசி(தி முஸ்லிம் எஜூகேஷனல் அசோசியேசன் ஆப் சதர்ன் இந்தியா,புதுக்கல்லூரி) உறுப்பினர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வேலைகளுக்கான(ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ், தமிழக தேர்வுகள்) ஒரு பயிற்சு மையம் புதுக்கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றேன.; அதற்கு ஒரு முன்னாள் செயலளரும் தற்போதைய உதவி தலைவரும் தற்போதை தலைவருக்கு ஆசைப்படுவருமான ஒருவர் சொன்னார் ‘போங்க, நம்ம பசங்க என்ன பயிற்சு கொடுத்தாலும் முன்னேற மாட்டார்கள். கிரசண்டு இன்ஜினீரிங் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார். அவர் தோல்விகளை முன்னுதாரணமாக எடுத்துச் சொன்னார். அதே நேரத்தில் நாட்டிலுள்ள 649 ஐ.ஏ.எஸ் வேலைக்கு சென்னை மனிதநேய மையம் நடத்தும் பயிற்சியில் 83 பேர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற வெற்றி உதாரணத்தினை எடுத்துக்கொண்டு தோல்வியினை முறியடித்து வெற்றிக்கனி பெறுவது என்ற செயலில் இறங்க அவர் மனம் மறுக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? அதைத் தான் ஆங்கிலத்தில், ‘டிபீட்டிஸம்’ அதாவது ‘கையாலாகாத்தனம்’ என்று சொல்லுகிறார்கள்.

பிரான்ஸ் நாடு பல ஆண்டுகளுக்கு முன்னால் போரில் தோல்வியினை அடுக்கடுக்காக சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டுத் தலைவருக்கு ஒரு நாள் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்;த இளைஞர் கூட்டத்தில் நெப்போலியனும் இருந்தான். அந்தத் தலைவரிடம் நெப்போலியன், ‘ஏன் பிரான்ஸ் நாடு போரில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுள்ளது, உங்களுக்கு வெற்றி பெறும் திறமையில்லையா என்று வினவினார்?’ அப்போது அந்தத் தலைவர், நெப்போலியனைப்பார்த்து, ‘உன்னால் முடியுமா என்றார்?’ அதற்கு ஒரே வரியில் நெப்போலியன், ‘முடியும்’ என்றான். பின்பு நெப்போலியன் மிகவும் குறைந்த உயரமே கொண்டிருந்தாலும் பார்ப்பதிற்கு சிறுவன் போல இருந்தாலும் பிரான்ஸ் நாட்டுத்தலைவராகி போரில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டினான். வுரலாற்றில் அவனது வெற்றியினை, ‘ஐ ஃபவுண்ட் தி துரோன் ஆப் பிரான்ஸ் ஆன் தி கிரவுண்ட், அன்டு ஐ பிக்ட்டு இட் பை மை ஸ்வோர்ட்’ என்று நெப்போலியன் சொன்னதாக ஆங்கிலத்தின் இருக்கிறது. அதாவது ‘பிரான்ஸ் நாட்டின் மகுடம் தரையில் வீழ்ந்து கிடப்பதினைக் கண்டேன், அதனை நான் எனது கத்தியால் எடுத்தேன்’ என்றான். ஆகவே சாதிக்க நினைத்தால் தோல்வி உன்னை நெருங்காது என்றால் மிகையாகாது.

அமெரிக்காவில் மெம்பிஸ் கிறித்துவ சர்ச்சுகளுக்கு மக்கள் கூட்டம் குறைந்த அளவே வந்தனர். ஆகவே சர்ச் நிர்வாகிகள் எவ்வாறு கூட்டத்தினை அதிகரிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது அவர்கள் சர்ச்சுகள் அருகில் உள்ள மைதானத்தில் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் வைத்தால் மக்கள் பார்க்க அதிகம் வருவார்கள் அத்துடன் சர்ச்சுளிலும் பிராத்தனை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. உடனே குத்துச்சண்டை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. என்ன ஆச்சரியம்? அவர்கள் எதிர்பார்த்தது போல் ஏராளமானோர் சண்டையும் பார்த்துவிட்டு சர்ச்சுக்கும் வந்தனர். அதேபோல் 700 இவாஞ்சலி சர்ச்சுகளிலும் டி.வி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மக்களை இழுத்தார்களாம். இதனை இங்கு ஏன் சொல்கிறேனென்றால் சர்ச் நிர்வாகிகள் தோல்விக்கான காரணம் ஏன் என்று அறிஞர் சாக்ரடீஸ் சொன்னது போல யோசித்து நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள். ஏன் கட்டுக்கோப்பான முஸ்லிம் சமுதாய அமைப்பினைக் கொண்டுள்ள நம்மால் முடியாதா? சென்னை சைதாப்பேட்டை மனித நேய மையம் போல் இலவச உணவு, தங்கும் இடம், பயிற்சி அளிக்க நமது முஸ்லிம் அமைப்புகளிடம் வசதி குறைவா? எத்தனை லட்சம் ரூபாய்கள் நன்கொடையாக வருகின்றன, மானியம் கிடைக்கிறது, வங்கியில் பிக்ஸட் டெப்பாசிட்டில் கோடிக்கணக்கான பணம் தூங்கும்போது முஸ்லிம் இளைஞர்களுக்கு ஏன் சென்னை மையப்பகுதியில் அரசுப்பணிகளுக்கு பயிற்சி அளிக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை? ஆனால் பதவி சுகமே மேலான ஒன்றாக கருதும் முஸ்லிம் தன்வான்களிடம் நாம் எதை எதிர்ப்பார்க்கமுடியும்?

முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் மற்றும் மாநிலத்தில் நடைபெறும் சர்வீஸ்கமிஷன் தேர்வுகள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகள் சம்பந்தமாகவும் நான் விரிவாக 12.9.2009 அன்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் 6.2.2010 அன்று தமிழில், ‘வெற்றிக்கொடி நாட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன் என்ற கட்டுரைகளை எழுதியுள்ளேன் என்பதினை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். சுpல தனி நபர்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி பற்றி எழுதினாலும் அல்லது முகாம்கள் நடத்தினாலும் ஒரு இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் பலர் கவனத்தினை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இப்போது நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு ஐ.என்.டி.ஜே சார்பாகவும், தமுமுக மாணவரணி சார்பாகவும் பயிற்சி முகாம் அளிக்கப்படுவது வரவேற்க தக்க ஒன்று. அவர்களுக்கு தேவையான யோசனைகளையும் நான் தெரிவித்துள்ளேன் என்பதினை உங்களுக்கு இந்தத் தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.


அவர்களுடைய சிறிய துவக்கம் நிச்சயமான பெரிய ஆலமரம்போல் பிற்காலத்தில் வளரும் என்பதில் ஐயமில்லை. பெரிய கட்டிடம் எழுப்ப சிறிய கல், ஒரு சட்டி சிமிண்ட் கலந்த மண்ணிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அது போலத்தான் சில எழுத்துக்கள் சேர்ந்து வார்த்தைகள் உருவாகும், ஒரு பட்டுப்புடவை செய்ய சில பட்டு நூல்கள் தேவை, பெரிய மாலை செய்ய பல பூக்கள் தேவை. குழந்தை பிறந்தவுடன் நடக்க முடியுமா? வெற்றியினை தங்கத்தட்டில் வைத்து யாரும் தாரை வார்ப்பதில்லை.

எப்போதும் ஒரு மனிதன் தாழ்வு மனதோடு இருந்தால் வெற்றிக்கனியினை பறிக்க முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சிறு உண்மை நிகழ்ச்சியினைச் சொல்லலாமே என்று நினைக்கிறேன். சென்னை நகரத்தில் ஒரு ஓய்வு பெற்ற 89 வயதான டாக்டர் ஒரு பார்க்கிற்குச் பேரக்குழந்தைகளுடன் சென்றார். அப்போது அங்கு விளையாடும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதிற்காக ஒரு பந்தினை எடுத்துச் சென்று வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு அந்தப்பந்தை தூக்கி எறிவதும் சிறு குழந்தைகள் அதனை எடுத்து வருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஒன்பது வயது பெண் குழந்தை அந்த பந்தினை எடுத்து வந்து தந்து விட்டு, ‘ஏன் தாத்தா உங்களால் எழுந்து நடக்க முடியாதா?’ என்று கேட்டது. அதற்கு அந்த பெரியவர், ‘ஏன் முடியுமே’ என்றார். உடனே அந்த சிறிமி தனது கால் சட்டையினைத் தூக்கிக் காட்டியது. அதன் வலது கால் முட்டிக்குக் கீழே விபத்தில் எடுக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ந்த அந்த முதியவர் வீல்சேரை விட்டு எழுந்து நடக்கலானார். இந்த பாடம் எதை உணர்த்துகிறது? நம்மை எந்த சூழலிலும் தாழ்வு மனப்பான்மை என்ற இருள் சூழ்ந்து கொள்ளக் கூடாது என்பதினை உணர்த்தவில்லையா?

நாம் தோல்வி மனதினைக் கொண்டுள்ளவர்களின் அறிவுரையினை ஏற்கக்கூடாது என்பதிற்கு ஒரு சிறு நீதிக் கதையினை சொல்லலாம் என் நினைக்கிறேன். ஒரு நீர் நிலை உள்ள குளத்தின் அருகில் உள்ள உயர்நத மரத்தின் அடியிலே கூடியிருந்த தவளைகளிடே ஒரு போட்டி எழுந்தது. அதாவது அந்த மரத்தில் எந்தத் தவளை வேகமாக முதலில் ஏறுகின்றது என்ற போட்டிதான் அது. பந்தயம் ஆரம்பமானது. சில தவளைகள் கீழே நின்று கொண்டு மரமேறும் தவளைகளுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தன. போட்டி ஆரம்பமானது. தவளைகள் ஒன்றை ஒன்று முந்தி ஏறத் தொடங்கின. கீழே நிற்கும் தவளைகள் உற்சாகமூட்டுவதால் அவைகளைப் பார்த்து மற்ற தவளைகளையும் பார்த்துப்பார்த்து வேகமாக ஏறின. ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் யாரையும் பார்க்காது வேகமாக ஏறி மற்ற தவளைகள் களைப்படைந்தாலும் அந்த தவளை வெற்றி இடத்தினை அடைந்தது.

பின்பு எல்லாத் தவளைகளும் கீழே இறங்கி வந்தன. அப்போது அங்கே இருந்த பெரிய தவளை வெற்றி பெற்ற தவளையைக் கேட்டது எப்படி நீ மற்றத்தவளைகளைப் பார்க்காது மற்றும் கீழே இருக்கின்ற தவளைகளின் உட்சாகத்தினையும் கேட்காது ஏறினாய் என்று. அப்போது வெற்றிபெற்ற தவளை சொன்னது கீழே நின்ற தவளைகள் சத்தம் போட்டார்களா? அதனை நான் கேட்கவில்லை, ஏனென்றால் என்னால் கேட்க முடியாத செவிடு என்றதே பார்க்கலாம். ஆகவே தோல்வி மனப்பான்மை கொண்டவர்களின் கருத்துக்களைக எப்போது முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்கிறதோ அப்போதே நாம் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுவோம். ஆகவே சிறிய துவக்கமே சிறந்த முடிவாக இருக்கும் என்பதினை வழியுறுத்தி ஐ.என்.டி.ஜே அமைப்பினரையும் த.மு.மு.க அணியினரையும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு பயிற்சியில் தங்களை ஈடுபடுத்துவது போல் மற்ற அமைப்பினரும் பல் வேறு அரசு வேலைகளுக்கு நமது சமுதாய படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.

பெரும்பாலும் காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் ஓட்டப்பந்தயம் 100, 400, 1500 மீட்டர்கள் இருக்கும் 1500 மீட்டர் ஓட வேண்டுமென்றால் நாம் தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது ஓடிப் பழகவேண்டும். பெரும்பாலும் நமது இளைஞரகள் கயிறு ஏறுதல், நெஞ்சு விரிவு போட்டிகளில் தோல்வி அடைவார்கள.; காரணம் கயிறு அல்லது மரம் ஏறி பழக்கம் இருக்காது, ஆகவே ஃபுல்அப்ஸ் எடுத்து பழகவேண்டும் மற்றும் மரத்தில் கயிறு கட்டி ஏறி பழகவேண்டும். அடுத்தது நெஞ்சு விரவு ஐந்து செண்டி மீட்டர் இருக்கவேண்டும். ஆனால் சிறு வயதில் தண்டால் அல்லது பெஞ்ச் பிரஸ் போன்ற பயிற்சி இல்லாதவர்கள் நெஞ்சு ஐந்து செண்டிமீட்டர் விரிவடையாது. மூச்சு இழுத்து 10வினாடி நிறுத்தும் பழக்கமிருந்தால் நெஞ்சு விரிவடையும். அதுபோல நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல்
பழக்கமிருந்தால்தான் வரும். முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களைக் கொண்டு அந்த பயிற்சி கொடுக்கலாம். சில இளைஞர்கள் பள்ளிக்கூடங்களில் விளையாடுவார்கள் ஆனால் படிப்பினை முடித்து விட்டு கல்லூரியிலோ அல்லது வேலை வாய்ப்பினைத் தேடிக்கொண்டுள்ளவர்கள் விளையாடுவது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதுபோன்ற பயிற்சி கொடுப்பதினை சென்னை மிண்ட் அருகில் உள்ள ஸ்கூலில் மற்றும் பொது பார்க்குகளிலும் பயிற்சி கொடுப்பதினை பலரும் பார்க்கலாம். நாம் எல்லா வயதிலும் உடற்பயிற்சியினை கைவிடக்கூடாது. அவை உங்கள் வேலைக்கு மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். அடுத்தது ஒரு பரிட்சையில் தேர்வு பெறவில்லையென்றால் மனந்தளராது உங்கள் ஊக்கத்தினை கைவிடாது உங்களது குறிக்கோளில் முனைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் தான்.; ஆகவே தான் ஊக்கமது கைவிடேல் என்றேன்.

Share this